roja idhaley books and stories free download online pdf in Tamil

roja idhaley

ரோஜா இதழே!

புதிதாக பூத்திருந்த அந்த ஒற்றை ரோஜாப் பூவை செடியிடமிருந்து கடனாக எடுத்துக் கொண்டான் கண்ணன்.அதன் மணத்தில் தன் மனதைப் பரிகொடுத்து பழைய நினைவுகளில் மூழ்கினான்.

"ஐயா?,நேரமாச்சு எந்திரிங்க,அம்மா காபி போட்டுட்டு இருக்கா,அப்பா இதோ தோசை ஊத்தப் போறேன்;சீக்கிரமா குளிச்சுட்டு வாங்க,இன்னைக்கு காலேஜுக்கு போகனும்ல?" கண்ணனின் அப்பா கனிவாக அவனை தூக்கத்திலிருந்து எழுப்ப அவனும் எழும்பி கல்லூரிக்குச் செல்ல ஆயத்தமானான்.

அடுத்த சில நிமிடங்களில் கமகமவென்று மணங்கமல கல்லூரிக்கு கிளம்பினான்.வீட்டிலிருக்கும் அனைவரின் ஆசீர்வாதத்தையும் மிச்சமின்றி வாங்கிக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான்.

கல்லூரியில் சேர்த்து கனத்த இதயத்தோடு வீடு திரும்பினார் கண்ணனின் தந்தை. கண்ணன் கலங்கினாலும் வெகு சீக்கிரமாகவே விடுதி வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டான்.நாட்கள் நகர நகர நட்பு வட்டமும் வளர்ந்தது.

கல்லூரியில் அவனுக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டான். ஏளனம்,நக்கல்,அலட்சியம்,அக்கறை,சோம்பல் தனம்,அதீத உளறல் கொண்ட கண்ணனை அனைவருக்கும் பிடித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.ஆனால் அவனுக்கு பிடித்தவரென்றால் அது மேரிராஜ் தான்.வள வளவென்று அளவின்றி பேசும் அவளைப் பார்த்தாலே பரவசமானான்.அவள் எப்போதாவது அருகில் நெருங்கும் போது அவளின் வாசம் செய்யும் மந்திரத்தில் மயங்கி விழுவதையே வேலையாக வைத்துக் கொண்டிருந்தான்.

அந்திவானம் வெட்கத்தில் சிவந்து கொண்டிருந்த நாளான அன்று மேரியின் பிறந்த நாள்.வெள்ளை ஆடைக்குள் வெண்சிலையாய் பொதிந்திருந்த மேரியை காணக் கண் கோடி வேண்டும்.கையில் இனிப்புகளோடு அவனை நோக்கி படையெடுத்தாள்.மரியாதைக்காக இனிப்பை எடுத்துக் கொண்டு அவளுக்கு கை குழுக்கினான்.அவள் கொடுத்த இனிப்பை விட தித்திப்பாக இருந்தது அவளின் கைகளை பற்றியத் தருணம்.காலம் முழுவதும் அந்த தித்திப்பிற்கு ஏங்கினான்.அவள் மீது கொண்ட காதலை அன்று தான் உணர்ந்தான். அன்றிலிருந்து அவளின் வாசனை தேடி காற்றாக அலைந்து திரிந்தான். அலைந்ததற்கு பலனாக மேரியும் அவனைக் காதலிப்பது கண்ணனால் நம்ப முடியாத விசயமாக இருந்தது.குறுஞ்செய்தி அனுப்பியே இருவரின் கட்டைவிரலும் ரேகை அழிந்துவிட்டது.மெது மெதுவாக குறுஞ்செய்தியை மறந்து தொலைபேசி உரையாடல்களில் உல்லாசமாக இருந்தனர்.

கைதேர்ந்த ஓட்டுனர் ஓட்டும் சொகுசுப் பேருந்தாய் சலனமின்றி போய்க்கொண்டிருந்த அவர்களின் காதலில் இடையூறாக அடிக்கடி நுழைவான் அஸ்ரப்.மேரியின் தோழன்.கண்ணன் காதலிக்கும் முன்பிருந்தே மேரியும் அஸ்ரப்பும் நெருங்கிய நட்புடன் இருந்தனர். அதை இப்போதும் தொடர்வது தான் கண்ணனுக்கு எரிச்சலைத் தரும் விசயம்.

முதலில் எதையும் கண்டு கொள்ளவில்லை.நாட்கள் மேரியையும் கண்ணனையும் நெருக்கமாக மிகவும் இறுக்கமாக கட்டத் தொடங்கியிருந்த சமயத்தில் அஸ்ரப்புடன் அவள் பழகுவது அவனுக்கு பிடிக்கவில்லை.

அதற்கு காரணமும் இருந்தது.புதிதாக நண்பர்கள் கண்ணனைத் தேடி வந்த சமயம் அது.அதாவது கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களுக்குப் பிறகு.வழக்கம் போல அன்றும் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவதைக் கேட்டு தலையாட்டும் பணியை செம்மையாக செய்து கொண்டிருந்தான் கண்ணன்.அனைவரும் ஏதேதோ பேசினர்.

அப்போது டேனியல் பரட்டைத் தலையுடன் கூட்டத்திற்குள் நுழைந்தான். தன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு சில பாக்கெட்டுகளை எடுத்து அருகிலிருந்த அஸ்ரப்பிடம் கொடுத்தான்.அனைவரும் கவனித்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.கண்ணனின் கண்கள் மட்டும் அந்த பாக்கெட்டுகளிலிருந்து வெளி வரவில்லை.சிறிது நேரத்தில் போன் கத்தியது.உடனே கண்ணன் கிளம்பினான்.பேசி முடித்து வரும் வேலையில் அங்கு அஸ்ரப்பும்,டேனியலும் இல்லை.

குழப்பத்துடன் அவர்களைத் தேடிச் சென்றான்.தேடிக் கொண்டிருந்தவனின் வேகம் சட்டென நின்றது.காதை கூராக்கி அந்த சத்தத்தைக் கேட்டான்.முனகல் சத்தம் இடைவிடாமல் கேட்டது.அந்த இடத்தில் அவனைத் தவிர யாருமில்லை என்ற அவனின் நினைப்பில் தீயை வைத்தது அந்த முனகல் சத்தம். வெளிச்சத்திற்கு போடப்பட்ட விளக்குகளும் பழுதாகியிருந்ததால் இருள் போர்த்திக் காணப்பட்டது அந்த இடம்.

தூரத்திலிருந்து பார்த்தால் யாருமில்லாததைப் போன்றே தோற்றமளிக்கும்.அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதன் விளைவு தான் இந்த முனகல் சத்தம்.கண்ணன் முனகலுக்கான காரணம் டேனியல் மற்றும் அஸ்ரப் ஆகத் தானிருக்கக் கூடும் என்பதில் தெளிவாக இருந்தான்.டேனியல் அஸ்ரப்பின் கையில் கான்டம் பாக்கெட்டுகளைக் கொடுத்ததும், அவன் செவியில் ஏதோ கூறியதும் அந்த முடிவிற்குத் தள்ளியது.

சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள மறைந்திருந்து காத்திருந்தான்.சிறிது நேரத்திற்குப்பின் ஆடைகளை சரிசெய்து கொண்டே ஒரு பெண் அந்த இருள் சூழ்ந்த இடத்திலிருந்து வெளியேறினாள்.முகத்திலிருந்து வேர்வைத்துளிகள் அவள் மார்புக்குழிக்குள் வழிந்து கொண்டிருந்தது. வேகவேகமாக நடந்து மறைந்தாள்.அவள் சென்றபின் அஸ்ரப் அவன் பின்னே டேனியலென வெளியேறினர்.கண்ணன் கழிகாலத்தின் கருமத்தை கண்கூட பார்த்து வெதும்பினான்.

அன்றிலிருந்து அஸ்ரப்பை பார்த்தாலே கடுப்படைந்தான்.சகல நாட்கள் கழித்து டேனியல் யாரைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தான்.கூர்ந்து கவனித்ததில் அவன் மேரியைப் பற்றி மோசமாகப் பேசியது கண்ணனின் செவிக்கெட்டியது.அவன் கூறுவதை ஆமோதிக்கும் விதமாக அஸ்ரப் தலையாட்டிக் கொண்டிருந்தான்.

இது போல காரணங்கள் கண்ணனிடம் அதிகமாகவே இருந்தன. அதனால் மேரியை அவனிடமிருந்து விலகச் சொல்லிக் கெஞ்சினான். மேரியும் விலகினாள் கண்ணனிடமிருந்து, காதலை விட தோழமை பெரிதாகத் தெரிந்தது அவளுக்கு.

அவளின் பிரிவு வருத்தமளித்தாளும் அடுத்த காதலுக்கு வெகு விரைவாக தன்னை தயார் படுத்தினான் கண்ணன்.

மேரியின் உயிர்த்தோழியான அனு கண்ணணைக் காதலிப்பது முன்பே தெரிந்திருந்தாலும் இந்த காதல் முறிவிற்குப் பின் தான் உணர ஆரம்பித்தான் கண்ணன்.குற்ற உணர்வு இருந்தாலும் அதையும் மீறி காதலிக்கும் எண்ணம் தோன்றியது அவனது மனதில்.

நேரடியாக சென்று அதிரடியாக எந்த தந்திரமும் செய்யாமல் பொறுமையாக தன் காதலை அவளிடம் கூறினான்.அவனிடமிருந்து இந்த வார்த்தைகளைப் பெறுவதற்காகத் தான் அனு காத்திருந்தாள்.

கண்ணீராய் கன்னங்களில் கசிந்த காதலை முத்தங்களால் ருசிக்க முனைந்தனர்.ஆனாலும் இருவரும் சேர்ந்து பேச ஒரு நிமிட தனிமை கூட கிடைத்ததில்லை.எப்போதும் அனுவுடனேயே மேரி இருப்பதால் இருவருமே குற்ற உணர்ச்சியால் தெரிந்தே விலகிக் கொண்டனர்.

காலமும்,காதலும் அவர்களை மிகுந்த தவிப்பிற்குள்ளாக்கிய பின் தனிமையைத் தந்தது.அன்று மேரியின் தந்தை அவளைக் காண வந்திருந்த காரணத்தால் அனு மட்டும் கல்லூரிக்கு வந்திருந்தாள். இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தனர்.எப்படியாவது இந்த தனிமையைப் பயன்படுத்தி அனுவின் இதழ்களுக்கு விருந்து படைக்கத் திட்டமிட்டான் கண்ணன்.

உணவு இடைவேளையின் போது அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.அனு மட்டும் கண்ணனின் குறிப்புணர்ந்தவளாய் காத்திருந்தாள்.அனைவரும் சென்ற பின் தயக்கத்தையும், நெருக்கத்தையும் குறைத்தனர்.கண்ணன் மூச்சினை அனுவும், அனுவின் மூச்சினை கண்ணனும் சுவாசிக்குமளவிற்கு நெருக்கத்தில் இருந்தனர்.அனுவின் இதழ்களை நோக்கி அவன் படையெடுத்துக் கொண்டிருக்கையில் வார்த்தைகள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு ஒதுங்கி நின்றன.

இதழ்களை நெருங்கும் நேரம் கண்ணணின் மார்பில் ஒரு கை வேகமாகத் தாக்கியது.இருவரையும் தூரமாகப் பிரித்து சில பல அறைகளை இருவருக்கும் தந்தது.கைக்கு சொந்தமானவரை பார்த்த போது கண்ணன் அடைந்த கோபத்திற்கு அளவேயில்லை.கண்கள் சிவப்பாய் கோபத்தை கொப்பளிக்க பார்த்தான் மேரியை.ஆம், அந்தக் கைகளுக்கு சொந்தக்காரி மேரி ராஜ்.

அவளை இருவருமே அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை.என்ன செய்வதென்று தெரியாமல் அனு திகைத்து போய் நின்றாள்.கண்ணன் மேரியை "*****,உனக்கு நா சந்தோசமா இருந்தாலே எரியுதா?;இப்ப இங்க இருந்து போறயா,இல்ல உன்னோட பல்லை உடைச்சு கையில குடுக்கவா?" என சீறினான்.

அவனின் கேள்விக்கு பதில் சொல்ல மேரி விரும்பவில்லை.தன் தோழி அனுவைப் பார்த்து"ஏண்டி இப்படி பண்ண;உன்னையெல்லா ச்ச்சீ,போ" திட்டத் தெரியாமல் கத்தினாள்.

"ஏய்,அவகிட்ட என்ன பேச்சு;நீ தான் உன்னோட ப்ரண்டஸ் முக்கியம்னு பொய்ட்ட;அவளும் அப்படியே இருக்கணும்னு சொல்றயா"கண்ணன் காது கிழிய கத்தினான்.

"நீ பேசாத டா;நான் செஞ்சது தப்பு தான்;ஆனா அதுக்காக நீ இப்படி பண்றத பாத்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது"மேரியின் குரலில் ஒரு வித அக்கறை இருந்ததை கவனித்தான் கண்ணன்.

அதற்குமேல் அவன் பேச விருப்பமின்றி சுவற்றின் மீது கோபத்தை காட்டிவிட்டு சென்றான்.அனு அழுது கொண்டே மேரியிடம் கோபித்துக் கொண்டு சென்றாள்.

மறுநாள் வழக்கம்போல கண்ணன் வகுப்பில் வந்து அமர்ந்திருந்தான். அப்போது அஸ்ரப்பும்,டேனியலும் மேரியைப் பற்றி ஏதோ பேசுவதை கவனித்தான்.

"டேய்,மேரி இன்னமும் இவனை லவ் பண்றா போலிருக்குடா"என கண்ணை காட்டி டேனியலிடம் அஸ்ரப் கூறினான்.

அதைக் கேட்டுவிட்டு சட்டென மேரியைத் தேடிச் சென்றான் கண்ணன். நேற்று நடந்த சம்பவங்களால் மேரியும்,அனுவும் தனித்தனியாக வந்து கொண்டிருந்தனர்.

கண்ணன் மேரியின் பக்கத்தில் சென்று அவளை மறித்தான்.

"மேரி? கொஞ்சம் பேசணும்"

கண்டுகொள்ளவேயில்லை,நடந்து கொண்டேயிருந்தாள்.

"மேரி,உங்கிட்ட தான் கேக்குறேன், ப்ளீஸ் கொஞ்சம் நில்லு" என கெஞ்சியபடி அவளின் கைகளைப் பிடித்தான்.

கைகளை உதறி அவன் கன்னங்கள் பழுக்க அறைந்தாள்.அவனை அறைந்தாலும் அழுதது என்னமோ அவள் தான்.

"நேத்து....நேத்து என்ன சொன்ன? "*****,உனக்கு நா சந்தோசமா இருந்தாலே எரியுதா?;இப்ப இங்க இருந்து போறயா,இல்ல உன்னோட பல்லை உடைச்சு கையில குடுக்கவா?" ஏண்டா என்னையப் புரிஞ்சுக்கவே மாட்ற" கண்களில் மடை திறந்த கண்ணீர் கன்னங்களை நனைத்தன.

மேலும் தொடர்ந்தாள்.

"நீ என்ன பயித்தியமாடா?,உனக்கு முன்னாலயே அந்த அஸ்ரப் பத்தி எனக்குத் தெரியும்,அவனோட பழகுனா அவனோட படுத்துருவேனு நினைச்சயா?,எதுக்குடா உன்னோட புத்தி அப்படி போச்சு" ஏமாற்றத்தின் தொனியில் பேசினாள்.

"இல்ல,மேரி நீ சொல்ற மாதிரியெல்லாம் இல்ல,ஏதோ தப்புனு பட்டுச்சு அதான் " எனத் தயங்கினான்.

"போடா!உனக்கு பொறுமையே இல்லைல?; திரும்ப நான் கிடைப்பேனு நம்பிக்கையே இல்லைல?;அவ்ளோ தானா நம்ம லவ்?"

அவள் நியாயமாகத் தான் கேட்பதாகத் தோன்றியது கண்ணனுக்கு. பதில் பேசாமல் நின்றான்.மேரி கண்ணீரைத் துடைத்து விட்டு நடக்க ஆரம்பித்தாள்.அவளின் மனதில் இருப்பதைத் தெரிந்து கொண்டப் பின் தன் தவறை புரிந்து கொண்டான்.

இருப்பினும் அஸ்ரப்பைப் பற்றி தெரிந்து கொண்டே அவனிடம் பழகுவது குறித்து பல கேள்விகள் அவனுக்குள் எழுந்தன.ஆனால் அதைக் கேட்டு தன் காதலை இழக்க விரும்பவில்லை.

அவளை நோக்கி ஓடினான்.மேரியின் கைகளை பிடித்து இழுத்து இறுக்கமாக அவளை கட்டிப்பிடித்தான்.அவனிடமிருந்து திமிறினாலும் சில விநாடிகளில் அவனிடம் சரணடைந்தாள் மேரி.

யாரைப் பற்றிக் கூறி தன் காதல் பிரிந்ததோ,அவனால் தான் இன்று அந்த காதல் சேரக் காரணம் என்பதை மதிக்கும் விதமாக அஸ்ரப்புடன் நட்பு பாராட்டினான் கண்ணன்.

"என்னங்க....கொஞ்சம் இங்க வாங்க"என்ற சத்தம் கேட்க மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தான் கண்ணன்.அவன் கையிலிருந்த ரோஜா யாரையோ தேடுவதைப் போல இருந்தது.அதை உணர்ந்த கண்ணன் தன் மனைவி மேரியின் குரல் வந்த இடத்திற்குச் சென்றான்.

சுடிதாரில் ரோஜா மொட்டாய் பார்த்த மேரி சேலையில் ரோஜாப் பூவாய் பூத்திருந்தாள்.அவனுக்காகவே இதழ்விரித்த அந்த பூவை இறுக்கமாக அணைக்க முனைந்தான் அவன்.

"ஏங்க,என்ன ஆச்சு உங்களுக்கு,ஐயா திடீர்னு ரொமான்ஸ் மூடுக்குப் போய்டேங்க போல?"கண்கள் மிளிர கேட்ட மேரியை மார்போடு அள்ளிக் கொண்டான் கண்ணன்.

"மஞ்சள் வெயில் மாலையிதே, மெல்ல மெல்ல இருளுதே" என்ற பாடலின் பின்னியில் காதலை பொழிந்தான் கண்ணன்.