ninaikkaatha neramedhu - 6 books and stories free download online pdf in Tamil

நினைக்காத நேரமேது - 6

நினைவு-6

மதியம் மணி மூன்றினைத் தொட்டிருந்தது. அந்த நேரத்தில் மதியம் சாப்பாட்டிற்கு, சண்முகம் வீட்டிற்கு வருவது வழக்கம். 

கட்டிடப் பணிக்குத் தேவையான, சிறு ஆணிமுதல், ஜல்லி, மணல், சிமெண்ட், கம்பி என சகலமும் கொண்ட ஹார்டுவேர் கடை அவருடையது. 

பெரிய பெரிய பில்டிங் கான்ட்ராக்டர்களும், மேஸ்திரிகளும், கைவசம் வாடிக்கையாளர்களாக இருப்பதால், எப்பொழுதும் வருமானத்திற்கு பஞ்சமில்லாத தொழிலாக சென்று கொண்டிருக்கிறது. 

காலைநேர உணவை முடித்துக் கொண்டு கடைக்குச் செல்பவர், மதியம் மூன்று மணியப் போல் வந்து சாப்பிட்ட பின், சற்றுநேரம் படுத்து ஓய்வெடுப்பது வழக்கம். 

மறுபடியும் ஐந்து மணிக்கு மேல் தான் கிளம்புவார். அது வரை கடை வேலையாட்கள் பொறுப்பில்.

இன்றும் வழமை போல், வீட்டிற்கு வந்தார். திவ்யாவின் வண்டியைப் பார்த்தவருக்கு முகத்தில் சிறு யோசனை.

"லட்சுமி…! லட்சுமி…!"

கணவர் வரும் நேரம் என்பதால் குரல் கேட்டவுடன், அவரும் வெளியே வந்தார்.

"என்ன லட்சுமி!? திவ்யா சீக்கிரம் வந்துட்ட மாதிரி இருக்கு."

"ஆமாங்க... தலவலின்னு மதியமே வந்துட்டா. ஆனா முகமே சரியில்ல." என கவலையுடன் பதிலளித்தார் லட்சுமி.

"அந்தப் பிள்ள சாப்பிட்டுச்சா லட்சுமி?"

"இல்லங்க... மாத்திர போட்டு படுக்கறேன்னு போனா. நானும் தூங்கட்டும்னு விட்டுட்டேன்"

பல நினைவுகளோடு தன் அறைக்குள் படுத்த திவ்யா அப்படியே கண்ணயர்ந்து விட, வெளியே இவர்கள் பேச்சுக் குரலோ, அல்லது பகலில் தூங்கிப் பழக்கமின்மையோ, ஏதோ ஒன்றில் கண் விழித்தவள், அறையை விட்டு வெளியே வந்தாள்.

வந்தவளை ஒரு கணம் ஊன்றிப் பார்த்த சண்முகமும், காலையில் போகும்போது இருந்த தெளிவும் உற்சாகமும், முகத்தில் இப்பொழுது இல்லை என்பதைக் கண்டு கொண்டார்.

"திவிம்மா! உடம்பு சரியில்லையா? ஹாஸ்பிடல் போலாமா?" அக்கறையோடு விசாரிக்க,

"வேண்டாம் அங்கிள்... தூங்கி எழுந்ததே நல்லா இருக்கு." உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு சொல்ல,

"சரிம்மா! இன்னும் நீயும் சாப்பிடலயாமே? வா திவி, சேர்ந்து சாப்பிடலாம்" என்று அழைத்தார்.

அப்பொழுதும் அவளுக்கு பசியில்லை. மனதின் பாரம், வயிற்றை நிரப்பியிருந்தது. அது என்ன? சந்தோசத்தால் மனது நிறைந்தாலும் பசிப்பதில்லை. சஞ்சலத்தால் மனது கனத்தாலும் பசிப்பதில்லை. இரண்டுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. 

சாப்பிட மறுத்தால், தேவையில்லாத வருத்தம் அவர்களுக்கும் வந்து சேரும். எனவே மறுத்துப் பேச மனமில்லாமல்,

"சரி அங்கிள்! முகம் கழுவிட்டு‌ வர்றேன்! அப்படியே பேக்ல இருக்கற லன்ச் பாக்ஸையும் எடுத்துட்டு வந்துடுறேன். அது வேஸ்டாயிருக்கும்." எனக் கூறிவிட்டு பாத்ரூம் சென்றாள்.

கணவன், மனைவி இருவர் பார்வையிலும், 'என்னவாக இருக்கும்' என்ற கேள்வி தொக்கி நின்றது.

"எதுவா இருந்தாலும் ராத்திரி சாப்பாட்டுக்குப் பின்னாடி பேசிக்கலாம் லட்சுமி. அந்தப் பிள்ளையே சொல்லும்"

"ம்ம்... நானும் அதத்தான் யோசிச்சேங்க... முதல்ல சாப்பிடட்டும்."

குளிர்ந்த நீர் முகத்தில் பட்டவுடன் ஒரு புத்துணர்வு. மன சஞ்சலத்தையும் சேர்த்துக் கழுவினாள் திவ்யா.

மங்கையர்க்கரசி சொன்னது போல், 'காலத்தின் கையில், முடிவை ஒப்படைத்து விட்டு, நடப்பது நடக்கட்டும்.' என்ற எண்ணத்தில்.

அறையை விட்டு வெளியே வந்தவள், சண்முகமும் உடை மாற்றி சாப்பிட தயாராகி வர, லட்சுமி பரிமாற சாப்பிட அமர்ந்தனர்.

சாதாரண ரசம் சோறு என்றாலே, உப்பு, புளி, காரம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சான்றிதழ் வழங்குபவள், இன்றைய சாப்பாட்டிற்கு பார்ட்டிசபனட் சான்றிதழ் கூட வழங்கவில்லை.

"திவிம்மா! இன்னைக்கு சாப்பாடு எப்படி இருக்குன்னு சொல்லவே இல்ல. ஒரு வேள... திரும்பத் திரும்ப ஒரே பொய்ய எத்தன நாளைக்கு சொல்றதுனு விட்டுட்டியா?"

அவளது அமைதியைக் கலைக்கும் பொருட்டு சண்முகம் கேட்க,

"ஏன் அங்கிள்? நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு! உங்களுக்கு ஏனிந்தக்கொல வெறி!"

"அவர் கெடக்குறாரு விடும்மா! சாம்பார் ஊத்துனா புளிக்குழம்பானு கேப்பாரு... புளிக்குழம்பு வச்ச அன்னிக்கு குருமாவானு கேப்பாரு!" என்று நொடித்துக் கொண்டார் லட்சுமி.

"இந்தா... நீயே சொல்லிட்டல்ல! நீ வைக்கிற குழம்பெல்லாம் எப்படி இருக்கும்னு." கிண்டலாய்க் கூற,

"ஏன் ஆன்ட்டி? வாயக் கொடுத்து மாட்டிக்கறீங்க!" சிரிப்புடன் திவ்யாவும் கேலியில் இறங்க,

"அவ வாயக் கொடுத்து மாட்டல திவிம்மா! கழுத்தக் கொடுத்து எங்கிட்ட மாட்டிருக்கா!" 

''ம்க்கும்..." என லட்சுமி நொடித்துக் கொண்டாலும், 

"தப்பு நான் வைக்கிற குழம்புல இல்ல... உங்க நாக்குல தான் சொரணையே இல்ல. நைட்டுக்‌ கடையில இருந்து வரும்போது உப்புத்தாளக் கொண்டு வாங்க. நல்லா வச்சுத் தேச்சாத் தான் சொரண வரும்." என்று உதடு பழித்துக் கூற,

"இப்ப தெரியுதா திவி? கொலவெறி யாருக்குனு!" அசராமல் பதிலுக்கு பதில் பேசினார் சண்முகம்.

இது இவர்களுக்குள் எப்போதும் நடப்பது தான். சண்முகம் தன் மனைவியைச் சீண்டி, எப்பொழுதும் செல்லச் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். 

வீட்டில் இருக்கும் நேரம் முழுமைக்கும் அவர் உச்சரிப்பது, லட்சுமி மந்திரமே! தான் எடுத்த எல்லா முடிவிற்கும், துணை நின்றவள், என்ற கர்வம் மிகுந்த பாசம் கணவருக்கு.

'குழந்தை இல்லை என, ஊராரும், உற்றாரும் தன்னை ஒதுக்கி வைக்கச் சொல்லிய போதும், ''எனக்குக் குழந்தை அவள்தான்." என்று தனக்குத் தந்தையுமானவன் மீது, தாய்மை கலந்த காதல் மனைவிக்கு.

இவர்களின் செல்லச் சண்டைகளும், சீண்டல்களும் பெண்ணவளுக்குத் தன் பெற்றோரின் அந்நியோன்யமான வாழ்க்கையை நினைவூட்டும் திவ்யாவிற்கு.

பேச்சினூடே சாப்பாட்டு வேலையை முடித்தனர். எழுந்து கை கழுவியவள், லட்சுமியுடன் சேர்ந்து எல்லாவற்றையும் ஒதுங்க வைத்தாள்.

 சண்முகம் ஓய்வெடுக்க மாடி அறைக்கு சென்று விட்டார். லட்சுமியும், திவ்யாவும் வீட்டின் முன் இருக்கும் தோட்டத்துப் பக்கமாக வந்தனர்.

"இந்த வாரம் நர்சரில இருந்து ஆள் வரச் சொல்லனும் ஆன்ட்டி. செடியெல்லாம் கொத்தி விட்டு, மருந்து அடிக்கனும். செடிகளை எல்லாம் வெட்டிக் கழிச்சு விடனும்."

"ஆமா திவி! பட்டுப் போன செடியெல்லாம் எடுத்துட்டு, வேற செடிகளை வைக்கணும்."

திவ்யாவின் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றவர்கள். அரசுப் பள்ளியில் உயர்நிலை ஆசிரியர்கள். வீட்டைப் பெரிதாகக் கட்டினால் பராமரிப்பு கஷ்டம் எனக்கூறி தேவைக்கு மட்டும் கட்டிக் கொண்டனர்.

தங்களுக்கும், மகளுக்குமென இரண்டு படுக்கையறைகள், ஹால், கிட்சன் அவ்வளவே. மாடியில் பாத்ரூமுடன் கூடிய ஒரு அறை மட்டும்.

அதில் தான் இப்பொழுது சண்முகம், லட்சுமி தம்பதிகளின் வாசம். திவ்யாவின் அம்மாவிற்கு, வீட்டைப் பராமரிப்பதில் இருந்த சுனக்கம், தோட்டப் பராமரிப்பில் இல்லை.

இரண்டு கிரவுண்ட் இடத்தில் வீடு கட்டியது போக மீதி முழுவதும் தோட்டமே.

நடுவில் நடைபாதைக்கென்று, கேட்டிலிருந்து வீட்டு வாசல் வரைக்கும் நான்கடிக்கு பாதை விட்டு, இருபுறமும் நேர்த்தியாக தோட்டம் அமைத்திருந்தனர்.

இடப்புறம் மல்லி, முல்லை, பிச்சி என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பந்தல். அதற்கடுத்து பாத்தி கட்டி ரோஜா, செவ்வந்தி போன்ற செடி வகைகள். வலப்புறம் பவளமல்லி, எலுமிச்சை, பாரிஜாதம், நந்தியாவட்டை என சிறு மரவகைகள்.

வீட்டிற்குத் தேவையான காய்கறிச் செடிகளையும் வளர்த்து வந்தனர். அவை குறுகிய காலச் செடிகள் என்பதால், அடிக்கடி மாற்ற வேண்டும். 

வீட்டின் கேட்டிற்கு வெளியே இருபுறமும் சரக்கொன்றை மரமும், வேப்ப மரமும் உண்டு.

கேட்டிற்கு உள்ளே வலப்புற ஓரம், பாலிகார்பனேட் ஷீட் கொண்டு தாழ்வாரம் அமைத்து, கார்பார்க்கிங் விடப்பட்டிருந்தது.

இப்பொழுது அந்த இடமே, சிமெண்ட் கூரை கொண்டு அதிகமாக தாழ்வாரம் இழுக்கப் பெற்று, சமையல் கூடமாகவும், சாப்பிடும் இடமாகவும், தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு பேருக்கு சமைக்கவும், சாப்பிடவும் உள் சமையலறை பற்றாது என்பதனால்.

இந்த செடிகொடி வகைகள் ஒவ்வொன்றிலும் திவ்யாவிற்குத் தன் பெற்றோரின் வாசம்.

"திவிம்மா! இந்த செடிகொடி எல்லாம் பாக்கும்போது, உன்னைப் பெத்தவங்க எவ்வளவு‌ ஆசையா இதெல்லாம் வளத்திருக்காங்கனு நினச்சுப்பேன். நமக்கெல்லாம் இந்த அளவுக்கு ஈடுபாடு வராது."

"என்ன ஆன்ட்டி இப்படி சொல்லிட்டீங்க! இந்த செடிகொடி வளக்குறது ரொம்ப ஈஸி. மண்ணத் தோண்டி செடிய நட்டுத் தண்ணி விட்டா போதும். ஆனா, நீங்க வளக்கற பதினஞ்சு செடிகளும், ஒவ்வொன்னும் ஒரு விதம்." என்றாள்.

அவங்க மனசுல எந்த விதமான தாழ்வு மனப்பான்மைங்கற விஷச்செடி வளராம பாக்கனும். ஒவ்வொன்னும் ஒவ்வொரு இடத்துலே இருந்து கொண்டு வரப்பட்ட செடிகள். அவர்களுக்கிடையே, பாசக்கொடிய பதியம் போடவேண்டும்.

ஒவ்வொன்னுக்குள்ளயும், வேற்றுமைங்கற பூச்சி விழாம பார்க்க வேண்டும். கொஞ்சம் கூட வாடவிடாம பாச நீர்விட்டு, நேச உரம் எப்பவும் போடவேண்டும். உங்க ஈடுபாடு யாருக்கு வரும் சொல்லுங்க?" எனக் கேட்டவளிடம்,

"போ திவி! நீ என்னென்னமோ சொல்ற... உங்க அங்கிள் என்ன சொல்றாரோ அதச் செய்றேன். அவ்வளவு தான்." என அப்பாவியாகப் பேசினார் லட்சுமி.

சிலர் இப்படித்தான். தான் செய்யும் காரியங்களின் மகத்துவம் தெரியாமலேயே செய்து கொண்டிருப்பர்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, பிள்ளைகளும் பள்ளிவேளை முடிந்து வீடு திரும்பினர்.

"ஐ….! திவிக்கா..,!" என்று சில பிள்ளைகளும்,

"என்னடா திவ்யாக்கா இவ்வளவு சீக்கிரமா வந்திருக்காங்க? உடனே புக்க எடு... நோட்ட எடுன்னு ஆரம்பிச்சுருவாங்களே?" என்றவாறு சில பிள்ளைகளுமாக உள் நுழைந்தனர்.

மதியம் சாப்பிட்டுப் படுத்த செல்லாத்தா, பாப்பாத்தியம்மா இருவரும் பிள்ளைகள் வரும் நேரமறிந்து எழுந்து வந்தனர்.

சண்முகமும் சற்றுத் தூங்கி எழுந்தவர், கடைக்கு செல்லக் கிளம்பி கீழ் இறங்கி வந்தார்.

பள்ளி விட்டு வந்த பிள்ளைகளும், தங்களை சுத்தம் செய்து கொண்டு வர அவர்களோடு சிறிது நேரம் செலவிட்டார்.

அதற்குள் பிஸ்கட்டும், டீயுமாக இரு பாட்டிகளும் வந்தனர். மாலைநேர சிற்றுண்டி அதிக நாட்கள் இதுவே.

சில நாட்கள் சுண்டலும் டீயும் மாலை நேரத்தை நிறைவு செய்யும். ஒன்று இரண்டு பிள்ளைகளுக்கே சமாளிப்பது கடினம். இங்கு அத்தனையும் சமர்த்தாக தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டனர். 

அப்படியும் ஒன்றிரண்டு புகார்ப் பத்திரிக்கை வாசிக்கும். சொன்னதை மட்டுமே செய்தால் அது பிள்ளைகள் அல்லவே. அதே போல் சண்டை, மல்லுக்கட்டல் மட்டுமே கொண்டதும் பிள்ளைகள் அல்ல. சண்டைகளும் உண்டு. அடுத்த சில‌ கணங்களிலேயே சமாதானமும் உண்டு. மறத்தலும், மன்னித்தலும் எளிது, இது சிறார் பருவத்திற்கே உரிய சிறப்பு.

"எல்லோரும் டீ குடிச்சுட்டு, கொஞ்சநேரம் விளையாண்டுட்டு, படிக்க ஆரம்பிக்கனும். சரியா?" என சண்முகம் கேட்க,

"சரிப்பா?' என கோரஸ் குரல்களில் பதில் வந்தன.

"அப்பா! நம்ம வீட்டுக்கு எப்ப போவோம்?" எனத் தனிக் குரலெடுத்து ஒரு பெண்பிள்ளை கேள்வி கேட்க,

"ஏன்டாம்மா!? உனக்கு இங்க என்ன‌ பிரச்சின?" என சண்முகம் வினவ,

"திவிக்கா தாம்ப்பா! மொத எல்லாம் நம்ம வீட்டுக்கு சன்டே சன்டே தான வருவாங்க. அப்ப எல்லாம் எவ்வளவு ஜாலியா விளையாடுவாங்க. ஆனா, அவங்க வீட்டுக்கு வந்தப் பின்னாடி, காலையில் எந்திரிச்சா யோகா பண்ணு, சாயந்தரம் ஆனா புக்க எடுன்னு ஒரே தொல்லப்பா!" எனப் புகார் வாசிக்க,

'என்னவோ' என எதிர்பார்த்திருந்த சண்முகம் அந்த பொடுசு சொன்ன தோரணையில் சிரித்து விட்டார்.

"உனக்கு உடம்பு வளையலன்னா அக்கா மேல புகார் சொல்லுவியா நீ!" என லட்சுமி கேட்க,

"போங்கம்மா! காலையில‌ தூங்கும்போது உங்கள எழுப்புனாத் தெரியும்." எனத் தன் தலையாய கஷ்டம் எது என்பதைக் கூறியது அந்த சின்னஞ்சிறு சிட்டு.

பின் சிலபல பேச்சுகள் பேசி விட்டு, "லட்சுமி! பாத்துக்க... நான் கிளம்புறேன்" எனக் கூறி விட்டுக் கடைக்குச் சென்றார்.