Is it a dream...? Is it real...? in Tamil Thriller by Mahendran Sandhiya books and stories PDF | கனவா...? நிஜமா...?

Featured Books
Categories
Share

கனவா...? நிஜமா...?

ஒரு சின்ன பொண்ணு...

ஒரு இருட்டு அறையில், வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறாள். சுவர்கள் கூட மூச்சு விடுவது போல இருந்தது. காற்றே இல்லாத மாதிரி நெஞ்சு அடைத்தது.

எங்க பார்தாலும் இருள். அடர்தியான, கனமான இருள்.  
கண்களை திறந்து இருக்கிறாளா... இல்லை மூடி இருக்கிறாளா... என்று கூட தெரியாத அளவுக்கு கருமையான இருள். நேரம் கூட தெரியவில்லை. கடிகாரம் ஓடும் சத்தம் கூட இல்லை.

ஆனா...  
அந்த சிறுமி இருட்டைப் பார்து பயந்து கண்களை மூடிக்கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை.  
நடுநிசி பன்னிரண்டு மணிக்கு பால் வாங்கிட்டு வரச் சொன்னாலும், தனியா தெரு தாண்டி, நாய் குரைத்தாலும் திரும்பி பார்காமல் போயிட்டு வரக்கூடிய தைரியசாலி அவள்.

அப்படியிருக்க...  
இப்போ மட்டும் ஏன் இந்த பயம்? நெஞ்சுக்குள் ஏதோ கனக்கிறதே? யாரோ பின்னாடி நிற்பது போல ஒரு உணர்வு.

சில நொடிகளுக்குப் பிறகு...  
அந்த இருளுக்குள் ஒரு சிறிய வெளிச்சம் தெரிந்தது. மின்மினி போல மங்கலாக. தூரத்தில் ஒரு கதவு இடுக்கு வழியாக வருவது போல.  
அந்த வெளிச்சத்தை நோக்கி நடந்தவளுக்கு, அந்த இடம் மிகவும் பரிச்சயமானதாக இருந்தது. ஓட்டு கூரையில் இருந்து விழும் மழை சத்தம், சிமெண்ட் தரையின் குளிர்சி, மூலையில் இருக்கும் பழைய ஊஞ்சல். எல்லாம் பழைய நினைவுகளை கிளறியது.

ஆம்...  
அது அவளுடைய பாட்டி வீடு.  
அவளுடைய வாழ்கையில் அதிகமான சந்தோஷங்களும், அதிகமான கண்ணீரும் பார்த வீடு. விடுமுறைக்கு வந்தால் தோட்டத்தில் ஓடி விளையாடும் இடம்.

திடீரென்று ஒரு அறையிலிருந்து சிரிப்பு சத்தம் கேட்டது. கலகலவென்று, பல பேர் சேர்ந்து சிரிப்பது போல. பழைய பாடல் ஒன்றும் மெதுவாக ஒலித்தது.  
அந்த சத்தம் வரும் திசையை நோக்கி நடந்தாள். காலடி ஓசை கூட எதிரொலித்தது. நெஞ்சு வேகமாக அடித்தது.

ஒரு பக்கம் பயம்...  
மறுபக்கம், "யாராவது என்னைக் காப்பாத்த வருவாங்களா?" என்ற சிறிய நம்பிக்கை.

அவளுடைய எதிர்பார்பு வீணாகவில்லை.  
அந்த அறையில் அவளுடைய பாட்டி, தாத்தா, தம்பி, தங்கை, அம்மா என எல்லோரும் இருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். டிவி-யில் பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது.

அவர்களைப் பார்ததும் அவளுடைய பயம் முழுவதும் மறைந்தது. கண்ணில் தண்ணீர் வந்தது. எத்தனை நாள் ஆச்சு இப்படி எல்லோரையும் பார்து.  
வேகமாக ஓடிப்போய் அம்மாவை கட்டிப்பிடித்தாள். "அம்மா..." 

ஆனால்...  
அம்மாவின் முகத்தில் சந்தோஷம் இல்லை. கண்கள் வெறித்திருந்தன. உடம்பு ஐஸ் மாதிரி குளிர்ந்திருந்தது.  
"நீ ஏன் இங்க வந்த?" என்று கடுமையாக, உயிரே இல்லாத குரலில் சொல்லிவிட்டு, அவளை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டார்.

கீழே விழுந்த வேகத்தில்...  
தலை சுற்றியது. காதில் ஏதோ ஓசை. அவள் மயங்கி விழுந்தாள்.

சிறிது நேரம் கழித்து கண் விழித்துப் பார்தாள்.  
இப்போது அவள் இருந்தது வேறொரு பாட்டி வீட்டில். இது பழைய வீடு. ஆனால் நினைவில் இல்லாத வீடு. சுவரில் பெரிய வெடிப்புகள். கூரையில் இருந்து ஒரு துளி தண்ணீர் விழுந்துகொண்டிருந்தது.  
தலையில் தாங்க முடியாத வலி. தொட்டு பார்தால் லேசான காயம் போல.

"நான் இங்க எப்படி வந்தேன்?"  
எவ்வளவு யோசித்தும், எதுவும் நினைவுக்கு வரவில்லை. கடைசியாக பார்தது அம்மாவின் கோப முகம் மட்டுமே.

அப்போது பாட்டி உள்ளே வரும் சத்தம் கேட்டது. கால் சலங்கை சத்தம். ஆனால் அந்த சத்தம் கூட பயமாக இருந்தது.  
"பாட்டி... இங்க என்ன நடக்குது? நான் எப்படி இங்க வந்தேன்?" என்று கேட்டாள்.

ஆனால்...  
அவளை ஒரு முறை திரும்பிப் பார்துவிட்டு, எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நடந்துபோனார். அந்த பார்வையில் ஏதோ பயம், ஏதோ குற்ற உணர்வு இருந்தது.

சிறிது நேரத்தில்...  
பாட்டி சமையல் செய்து கொண்டிருந்தார். அடுப்பு நெருப்பு மட்டும் மினுங்கியது. வீடு முழுக்க மௌனம்.  
அதைப் பார்த அவள்,  
"பாட்டி... நீங்க உட்காருங்க. நான் சமைக்கிறேன்..." என்று சொல்லி, எல்லா வேலைகளையும் முடித்தாள். பாத்திரம் தேய்தது, வீடு பெருக்கியது.

அப்போது தான்...  
பல நாட்களுக்குப் பிறகு, பாட்டி அவளிடம் முதன்முதலாக பேசினார். குரல் நடுங்கியது.  
*"நதியா... போய் தூங்கும்மா. உன்னைப் பார்க ரொம்ப சோர்வா இருக்கு."*

அந்த ஒரு வார்தையில் தான் அவள் பெயர் வெளிவந்தது.  
*நதியா.*  
அந்த பெயரை கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் வந்தது. "என் பேரு... எனக்கே மறந்து போச்சே..."

"சரிங்க பாட்டி...  
இப்பவாச்சும் என் பேர சொல்லி கூப்பிட்டீங்களே...  
அதுவே போதும்."

நதியாவும் அமைதியாக படுத்துக்கொண்டாள். ஆனால் தூக்கம் வரவில்லை.  
அந்த வீடு அவளுக்கு புதுசாக இருந்தது. பழைய மரக்கதவுகள். வெளிச்சம் குறைந்த அறைகள். ஜன்னல் வழியாக வரும் காற்று கூட சத்தம் போட்டது.  
அங்கே இருப்பவர்கள் எல்லோரிடமும் ஒரே பதில்... 

"நதியா இங்க இல்ல..."  
அவளை யாரிடமோ மறைத்து வைத்திருப்பது போல. 
ஆனால்... ஏன்?  
அந்த கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

குழப்பத்தோடு தூங்கிப் போனாள்.

தூக்கத்தில்...  
யாரோ அவள் பெயரை அழைப்பது போல இருந்தது.  
"நதியா...  
நதியா...  
நதியா..."  
மூன்று முறை... பாட்டியின் குரலில். ஆனால் குரல் தொலைவில் இருந்து வருவது போல.

பாட்டி கூப்பிடுறாங்கன்னு நினைச்சு கண் திறந்தாள்.  
அடுத்த நொடி...  
அவளுடைய மூச்சே நின்றுபோனது.

முதலில் ஒரு குளிர் காற்று அவள் முகத்தில் பட்டது.  
பிறகு கருகிய வாசனை... புகை மாதிரி. தொண்டை அடைத்தது.  
யாரோ அருகில் நிற்பது போல ஒரு உணர்வு. மெதுவாக கண்ணை திறந்து பார்தாள்.

அவள் முகத்துக்கு நேராக...  
முழுவதும் எரிந்து, கருகி, அழுகிப் போன ஒரு உருவம்...  
காற்றில் மிதந்து கொண்டிருந்தது. தலைமுடி கலைந்து, கண்கள் மட்டும் கருப்பாக, அவளையே ஊடுருவி பார்தன. வாயில் இருந்து புகை வந்தது.

கத்த வாயைத் திறந்தாள்.  
ஆனால்...  
சத்தம் வரவில்லை.  
யாரோ கழுத்தை நெரித்தது போல...  
மூச்சு முட்டியது. கை கால் உறைந்து போனது.

திடீரென்று...  
பதறி கண் திறந்தாள். வியர்வை ஆறாக ஓடியது.  
எல்லாமே கனவு.  
"அப்பாடா..." என்று நிம்மதியாக மூச்சு விட்டாள்.

மீண்டும் கண்களை மூடி திறந்தாள்.  
அதே நொடியில்...  
கனவில் பார்த அதே உருவம்...  
அவள் கண் முன்னே...  
காற்றில் கரைந்து கொண்டிருந்தது. சிரிப்பது போல இருந்தது.

ஒரு நிமிடம்...  
மூச்சே நின்றது.  
கத்தவும் முடியவில்லை.  
அசையவும் முடியவில்லை.

மீண்டும் கண்களை மூடி திறந்தாள்.  
அறை முழுவதும் இருள்.  
அந்த இருளுக்குள்...  
ஒரு குரல் மட்டும் தெளிவாக கேட்டது.  
"நதியா..."

அவள் உடம்பு முழுக்க நடுங்கியது.  
ஏனென்றால்...  
கனவு முடியவில்லை...  
அது இப்போதான் ஆரம்பம்.

அது கனவா...?  
இல்லை...  
யாரோ அவளை அழைத்துக் கொண்டிருக்கும் நிஜமா...?

---
சில நேரம் கனவும் நிஜம் போல...  
பல நேரம் நிஜம் கூட நிழல் போல...  
– Puppyma