ninaikkatha neramethu - 22 books and stories free download online pdf in Tamil

நினைக்காத நேரமேது - 22

நினைவு-22

தலையில் நெருக்கக் கட்டிய முல்லைப்பூச்சரம், ஆரஞ்சும் இளஞ்சிவப்பும் கலந்த சல்வாரில் அவனது தேவதை பவளமல்லி திட்டில் அமர்ந்திருந்தாள். மாடியில் இருந்தவாறு கைப்பிடிச் சுவரில் குனிந்து முழங்கையை குற்றி ஊன்றியவாறே அவளை ரசித்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

கையில் அவன் மாலையில் கொடுத்த வரைபடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பெற்றோருடன் அவளும் சேர்ந்து எடுத்த நிழற்படம் பென்சில் ஓவியமாய் அவள் கைகளில், நேர்த்தியாக வரைந்து கொடுத்து இருந்தான்.

பிள்ளைகள் மாலை பள்ளி விட்டு வந்ததும் தேவியை அழைத்த கண்ணன், "தேவி உனக்கு பூக்கட்ட தெரியுமா?" எனக்கேட்க,

"மாலைக்கட்டே கட்ட தெரியும்ண்ணே... யூ டியூப்ல பாத்து கத்துக்கிட்டேன்." என்றாள்.

"அதை‌ இன்னொரு நாளைக்கு கட்டிக்கலாம். இப்ப, கொடியில் இருக்க முல்லை பூவைப் பறிச்சு தலையில் வைக்கிற மாதிரி சரமா கட்டிக் கொடுடா ம்மா!" என்று கேட்க,

"எதுக்குண்ணே? புதுசா பூவெல்லாம் கட்டச் சொல்றீங்க! கடையில பூஜைக்கு வேணுமா? இன்னைக்கி வெள்ளிகிழமை கூட இல்லியே?' என்று கேள்வி கேட்டாள் தேவி.

"நீ கட்டிக்கொடு! அது உனக்கே கொஞ்ச நேரத்துல தெரியும்!" என்றவன் அவனுமே அவளுக்கு பூப்பறிக்க உதவினான்.

சிறிது நேரத்தில் பிள்ளைகளை‌ ஒன்று கூட்டியவன், "குட்டீஸ் இன்னைக்கி உங்க திவிக்காவோட பர்த்டே... அதை சிம்பிளா செலப்ரேட் பண்ணலாமா?" எனக் கேட்க,

"ஹேய்ய்ய்... ஜாலி! அப்ப இன்னைக்கி ஹோம்வொர்க்ல இருந்து எஸ்கேப்." என்ற சில பொடுசுகள் ஆர்ப்பரிக்க,

"அதென்ன? உங்க அக்கா! அப்படினா உங்களுக்கு யாரு? நம்ம அக்கானு பொதுவா சொல்ல வேண்டியது தான?" என்று எடக்கு மடக்காக கேள்வி கேட்டான் சதிஷ்.

"ஏன்டா… ஏனிந்த கொல வெறி?"

"உங்களுக்கு முன்னாடியே சீனியரா பிள்ளைகளைக் கவனிச்சுகிட்டவன் நானு... இப்ப நீங்க பெரியவர்ங்கறதால தான் உங்க பொறுப்புல எங்களை எல்லாம் விட்டுட்டுப் போயிருக்காங்க... எங்களுக்கும் பொறுப்பு இருக்குல்ல?" என தனது சீனியாரிட்டியை அவனுக்கு உணர்த்தினான்.

"உன்னோட பொறுப்புணர்ச்சியப் பாத்து புல்லரிக்குதுடா!" என்று கண்ணன் கூறிக் கொண்டிருக்க,

"டேய் சதிஷ்! அண்ணாக்கும் எப்படிடா அக்கானு சொல்ல முடியும். அவர் தானே வயசுல பெரியவரு! அப்ப ஆதிக்கா அவருக்கு தங்கச்சிதானே?" என்று ஒரு பொடுசு தனது மேதாவித்தனத்தைக் காமிக்க,

அடேய் அரைடிக்கெட் தெய்வங்களா... நீங்க அவளை எனக்கு ராக்கி கட்ட வைக்காம விடமாட்டீங்க போலிருக்கே!' உள்ளுக்குள் நொந்து கொண்டவன்,

"ஏன்டா இப்ப முறையாடா முக்கியம்? அக்காவ கூப்பிடுங்கடா! செலபிரேட் பண்ணுவோம்!" என்று அனைவரையும் ஊக்கப்படுத்தினான்.

திவ்யாவும் மதியம் மீண்டும் ஒரு மாத்திரையைப் போட்டு படுத்தவள், பிள்ளைகள் அரவத்தில் கண் விழித்தாள். மன உளைச்சலாலும், அழுததாலும் வந்த சாதாரண காய்ச்சல் என்பதால் இரண்டு வேளை மாத்திரையிலேயே ஓரளவுக்கு தெளிந்து விட்டது.

எழுந்தவள் முகங்கழுவி வந்தாள். அதற்குள் பிள்ளைகளும் அவளது அறைக்குள் வந்து ஆர்ப்பாட்டமாக, "ஹேப்பி பெர்த்டே அக்காஆஆஆ!" என்று ஒன்று சேர்ந்து கத்தின.

"டேய்! யாருடா சொன்னது?" என்று ஆச்சர்யத்தில் விழி விரிக்க,

"வருஷா வருஷம் ஸ்வீட் வாங்கி தின்ன நாங்க மறந்துட்டோம். ஆனா கண்ணா அண்ணாக்கு எப்படி தெரிஞ்சது?" என சதிஷ் கேட்க,

"அதானே! எப்படிடா தெரியும்?" என்றாள் வியப்பை விழியில் ஏந்தி.

"காலையில உன் ஃபோன்ல இருந்த ஸ்கிரீன் போட்டோல இருந்து தெரிஞ்சுகிட்டேன்." என்றான் அவள் அறையின் வாயிலில் நின்றவாறே.... அவனது கையில் தேவி கட்டிக் கொடுத்த முல்லைச்சரம்.

"இந்தா! தலைசீவி இந்த பூவை வச்சுட்டு, உன்னோட அப்பா அம்மா ஃபோட்டோக்கு விளக்கேத்திட்டு வெளிய வா! பிள்ளைக ரொம்ப ஆர்வமா இருக்காங்க." என்றான்.

"எதுக்கு இதெல்லாம்? ப்ளீஸ் வேண்டாமே!" 

"நீ பிறந்தநாள் அதுவுமா இப்படி இருக்கறதுல, உன்ன பெத்தவங்க ஆத்மா சந்தோஷப்படும்னா நீ இப்படியே இரு!" என்றவன் கோபமாக உள்ளே வந்து அவள் கைகளில் பூச்சரத்தை திணித்து விட்டு வெளியேறினான்.

"அக்கா ப்ளீஸ்க்கா! வேற ட்ரெஸ் மாத்திட்டு வாங்கக்கா! ஜாலியா நம்ம விளையாண்டு ரொம்பநாள் ஆன மாதிரியிருக்கு." என்று பிள்ளைகள் கூற, "சரி. நீங்க போங்க! ரெடியாகிட்டு வர்றேன்." என்று கூறினாள் திவ்யா.

"இது எங்களுக்காக சொன்ன மாதிரி தெரியலியே. சொன்னா… சின்ன பையன்னு சொல்லுவாங்க!" என்றான் சதிஷ்.

"என்னடா சொல்ற!" 

"ம்ம்... காக்கா கருப்புனு சொன்னேன்."

"காக்கா கருப்பு தானேடா?"

"நானும் இப்ப அதைத் தானே க்கா சொன்னேன்."

"டேய்... வேண்டா. ஓடிப் போயிரு... பிறந்தநாளும் அதுவுமா என்னை வெறுப்பேத்தாத!"

"இப்ப நாங்க பேசுனா வெறுப்பேத்தற மாதிரி தான் இருக்கும்."

"என்னடா ஆச்சு உனக்கு?"

"எனக்கு ஒன்னுமாகல.... நீங்க கிளம்பி வாங்க! வாங்கடா நம்ம போகலாம்." என்று சதிஷ் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

தனது கபோர்டைத் திறந்தவள், அதிலிருந்த புது சல்வாரை பார்த்தாள். சரஸ்வதி ஷாப்பிங் செல்லும் பொழுது, தன் மகளுக்கு இந்த உடை நன்றாக இருக்கும் என்று தோன்றினால் உடனே வாங்கி விடுவார். அப்படி வாங்கி வந்தது தான் அந்த சல்வார்.

அதை கையில் எடுத்தவள் கண்கள் கலங்க, கண்ணன் கூறியது நினைவிற்கு வரவும் சட்டென இயல்பிற்கு திரும்பினாள். ‘அம்மா அப்பா இருந்தா எப்படி சந்தோஷமா இருப்போமோ அதே மாதிரி இருக்கணும்.’ என்று எண்ணிய வளாக.

புத்துடையில், நீண்ட கூந்தலில் முல்லைச்சரம் தோள் தழுவ, நெற்றியில் சிறு பொட்டும், விபூதித் தீற்றலும், மை விழியுமாக பூவுக்குள் பொதிந்த வண்ணத்துப்பூச்சியாக வந்தவளை கண்ணன் கண்ணிமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையைப் பார்த்துக் கொண்டே வந்தவள், 'இன்னைக்கி ஏதோ வித்தியாசமா இருக்கே! அக்கறை தாண்டி கண்ணு வேற ஒன்னு சொல்லுதே!' என்று எண்ணியவாறே வந்தாள்.

"வா கண்ணு! இன்னைக்கி பொறந்த நாளுனு நீ சொல்லவே‌ இல்ல... கண்ணன் சொல்லித் தான் தெரியும்." என்றவாறு இரு ஆத்தாக்களும் சுடச்சுட கேசரி கிண்டி எடுத்து வந்தனர்.

"அண்ணே! கேசரி வொர்த்தே இல்ல... நீங்க இன்னும் வளறனும்." என்று சதிஷ் கூற,

"இதுக்கும் மேலயாடா? இப்பவே முகடு தட்டுதேடா!" கண்ணும் இயல்பாகக் கூற, முகம் சுருக்கினான் சதீஷ்.

"அண்ணே! ம்கூம்.. சான்ஸே இல்ல"

"புரியுதுடா! அண்ணே நிலமை அப்படிடா சதீஷ்... அடுத்த வருஷம் பாருடா சமாய்ச்சிடறேன்!"

சண்முகம் இல்லாத சமயத்தில் உரிமையாக பணம் எடுக்கத் தயங்கினான். தன்னவளுக்கென வாங்கும் பொழுது அது தன்னுடைய தனிப்பட்ட சம்பாத்தியமாக இருக்க வேண்டும் என‌ நினைத்தே பணத்தை எடுக்கவில்லை.

கேசரியையே வட்டமாக வடிவமைத்து அதன் நடுவில் ஒரு மெழுகுவர்த்தி வைத்து ஊதி, கேசரி வெட்டினாள்.

அனைவரும் கைதட்டி வாழ்த்து பாட, வாங்கி வந்த மிக்ஸரோடு, கேசரியும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாட்டம் முடிய, அவளது கையில் சுருட்டிய சார்ட் பேப்பரைக் கொடுத்தான்.

அதை விரித்து பார்க்க, பெற்றோருடன் அவளிருந்த நிழற்படத்தை ஓவியமாகத் தீட்டி இருந்தான்.

"வாவ்! சூப்பரா இருக்கு கண்ணன். எப்ப வரைஞ்சீங்க?" என்றாள் ஆச்சரயம் மேலிட!

"உன்னோட ரூம்ல இந்த ஃபோட்டோவைப் பார்த்தேன். அதை எடுத்துட்டுப் போய் தான், மதியம் வரைஞ்சேன்."

"உங்களுக்கு ட்ராயிங்க் தெரியுமா?"

"தெரியல... வரையணும்னு தோணுச்சு. ட்ரை பண்ணேன். ஈஸியா இருந்துச்சு."

டெக்ஸ்டைல்ஸ் தொழில் சம்பந்தமாக, ஆடை வடிவமைப்பு பற்றி தெரிந்து கொள்வதற்காக டிசைனிங் கற்றுக் கொண்டதன் விளைவாக அவனுக்கு பென்சில் ஓவியம் பழக்கமாகி இருந்தது.

அதையே நிலவொளியில் பவளமல்லி திட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவள், அருகில் அரவம் கேட்க, நிமிராமலே தெரிந்தது யாரென்று!

"ஒரு ஓவியமே ஒரு ஓவியத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறதே! அடடே! ஆச்சரிய குறி!" என்றவாறு வந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"இன்னைக்கு ஏதோ வித்தியாசமா இருக்கே." என்றாள் அவனைப் ‌பார்த்து புருவம் சுருக்கி...

"அப்படியா? எனக்கொன்னும் அப்படி தெரியலயே. ஆனா இன்னைக்கு எனக்கும் மறக்க முடியாத நாள் தான்."

"அப்படி என்ன ஸ்பெஷல் இன்னைக்கி? அதென்ன கையில? இன்னொரு ட்ராயிங்கா!" என்றாள் அவன் கைகளில் இன்னோரு சுருட்டிய சார்ட்டைப பார்த்தவள்.

"ஆமா! ஆனா இது எனக்காக!" என்றான்.

"கொடுங்க பாக்கலாம்...." என்று அவள் கேட்க, அவள் கையில் கொடுத்தான்.

விரித்துப் பார்த்தவள் விழியும் விரிய, சற்று கோபத்துடன், "யார் உங்களுக்கு இந்த உரிமையைக் கொடுத்தது கண்ணன்?" என்று கோபத்தில் வெடித்தாள்.

"காலையிலேயே ஒரு பட்சி மயக்கத்துல சொல்லுச்சு தியா!"

"என்னதிது பேரெல்லாம் புதுசா இருக்கு?"

"ஏன்? அதுதானே உன்பேரு... இதுல புதுசா என்ன இருக்கு?"

"பேரை சுருக்கற உரிமையை யார் கொடுத்தது?"

"ஏன் தியா? மயக்கத்துல இருந்தாதான் மனசுல இருக்கிறதை ஒத்துப்பியா? ஆனா நான் சொல்லணும்னு அவசியமே இல்லை தியா... எம் மனசுல நீதான் இருக்க... அது உனக்கும்‌ தெரியுது. சாயங்காலம் நான் கொடுத்த ட்ராயிங் பாத்து வரைஞ்சது.

ஆனா இது என் மனசுல இருக்கற உன் உருவத்தை மனக்கண்ல பாத்து வரஞ்சது. அதுல விட இதுல தான் நீ தத்ரூபமா இருக்க... எனக்குனு வேற யாரும் இருப்பாங்களோங்கற எண்ணம் இப்ப வரைக்கும் துளியுமில்ல. உள்ளுணர்வு பொய் சொல்லாது. எனக்கானவள் நீ மட்டும் தான்." என்றான் அவளைப் பேசவிடாமல் சற்று கோபமாக! 

அதில் திவ்யாவை மட்டும் பவளமல்லி திட்டில் அமர்ந்து, எதிர்நோக்கும் தோற்றத்தில் பென்சில் ஓவியமாக, தத்ரூபமாகத் தீட்டி இருந்தான். 

அவளோ காய்ச்சல் மயக்கத்தில் தன் காதலை வெளிப்படுத்த, இவனோ தனக்கு உரிமையானவள் நீ என்பதை கோபமாக வெளிப்படுத்தினான், அவளது காதலை‌ மனதுக்குள் போட்டு அவள் மருகுவது பொறுக்க மாட்டாமல்.

"இல்ல கண்ணன்... நாளைக்கே யாராவது உரிமை கொண்டாடிட்டு வந்தா என்னால விட்டுக் கொடுக்க முடியாது." என்று குரல் தழுதழுக்க,

"யாரு விட்டுக் கொடுக்கச் சொன்னது? கண்ணன்னு பேர மட்டும் வச்சுட்டு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனா வாழ முடியும்? சொல்லு!" என்று அவளைப் பார்த்து புருவம் உயர்த்திக் கேட்க, நொடியில் யோசித்து சுதாரித்தவள்,

"ஓஹோ… ஐயாவுக்கு அப்படியொரு ஆசை இருக்கா? எவளாவது வரட்டும். அப்ப தெரியும் இந்த திவ்யா யாருனு..." என்று அவள் சண்டைக்கோழியாய் சிலிர்த்து நின்றாள்.

"இப்பவே எனக்கு தெரியுதே! நீ யார்னு..." புன்னகை முகமாகக் கூற,

"என்ன தெரியுதாம்?" 

"இந்த கண்ணனின் ராதை நீதான்னு." புருவம் உயர்த்தி அவன் கூறிய விதத்தில், பெண்ணின் மனம் மயங்கித் தான் போனது.

பேசிக்கொண்டே அவள் அருகில் அமர்ந்திருந்தான். அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொதித்துக் கொண்டவன்,

"தியா... இந்த நிமிஷம் மட்டும் உண்மை. இந்த சந்தோஷத்தை மனசு அப்படியே அனுபவிக்கட்டும். அதைப் போட்டுக் குழப்பாதே!" 

அவன் தோள் சாய்ந்திருந்தாள் கன்னியவள், அந்தக் கண்ணனின் ராதையாக. 

உரிமையோடு உச்சி முத்தம் வைத்தான், உன்னவன் நான் எனும் விதமாக!

இந்த நாளையே மறக்க மாட்டேன் என்று கூறியவன்‌ அவளையே மறந்தது‌ எங்ஙனமோ?!

***

உன்னை எண்ணித்தானே என் வீட்டில்
நந்தவனம் என்று செடி நட்டு வைக்கிறேன்

உன்னை எண்ணித்தானே கண்ணாளா
படுக்கையில் பாதியிடம் விட்டுவைக்கிறேன்

என்னை உனக்குள் தொலைத்து விட்டேன்
இந்தக் கன்னியே எண்ணி எண்ணியே
இளைத்து விட்டேன்

என் கொம்புத்தேனே
உனை நம்பித்தானே
என் தங்கக் கூண்டைத் தாண்டி வந்தேனே

ஒரு ஆணும் பெண்ணும்
இட்டுக் கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும்
மோதிக் கொள்ளும் சத்தம்

இவன் மஞ்சம் போடும் மன்னன்
இவன் கொஞ்சும் போது கண்ணன்
என் உயிர்வரை பருகியவன்